தாங்கள் ஆக்கங்களை உலகறியச்செய்ய adiraithenral@gmail.com என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள் (பகுதி 3)

பங்கிடும் முறை

சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வரு
கிறது. இதற்கு நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை. இவ்வாறுதான் கொடுக்கவேண்டும், இவ்வளவுதான் உண்ணவேண்டும் என்ற வரம்பு எதுவும் இல்லாததால், அவரவர் விரும்பிய அளவு தர்மம் செய்யலாம். அதேசமயம், இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக்கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்கவேண்டும்.

குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் கட்டளைக்கு முரணானதாகும். 'அல்ஹஜ்' அத்தியாயத்தின் 28 வது வசனத்தில் 'அவற்றை நீங்களும் உண்ணுங்கள்; வறிய ஏழைகளுக்கும் வழங்குகள்' என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

ஆட்டை உரிப்பவ‌ரின் கூலி
"நபி(ஸல்)அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தபோது, அதன் இறைச்சியையும், தோலையும் விநியோகிக்குமாறும், ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக இதில் எதனையும் கொடுக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டனர்" என்று அலி(ரலி)அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
                                 நூல்: புகாரி(1717)
இந்த ஹதீஸிலிருந்து அறுப்பவர்களுக்கும் உரிப்பவர்களுக்கும் தனியாகத்தான் கூலி கொடுக்கவேண்டுமே தவிர குர்பானியின் எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

விநியோகம் செய்தல்
குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்டபோது, 'நீங்கள் உண்ணுங்கள்; வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் அனுமதிய‌ளித்தார்கள். நூல்: புகாரி(1719)  
                             
எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாமா?
மக்காவில் குர்பானி கொடுக்கப்பட்ட ஆட்டின் இறைச்சியை மதீனாவிற்கு நபி (ஸல்) அவர்களிடம் நாங்கள் கொண்டு வருவோம் என்று ஜாபிர்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது. ஆக, குர்பானி இறைச்சியை தேவைப்பட்டால் பிற ஊர்களுக்கு எடுத்துச் சென்றும் விநியோகிக்கலாம்.

ஒரு குடும்பத்துக்கு எத்தனை ஆடுகள் கொடுப்பது?
நபி(ஸல்)அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூ அய்யூப்(ரலி)அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக்கூடிய நிலை ஏற்பட்டுவிட்டது என்று விடையத்தார்கள்.
                    அறிவிப்பவர்: அதா இப்னு யஸார்; நூல்கள்: திர்மிதீ (1425), இப்னு மாஜா (3137), முஅத்தா (921)

எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரே ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்துக் கொள்ளலாம். அதேசமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக் கூடாது என்பதற்கும் தடை எதுவுமில்லை. நபி(ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்களை குர்பானிக் கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேணங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன்.
                          அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: புகாரி (1718)

ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி
மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானிக் கொடுக்க விரும்புபவர்கள் ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஏழு பேர் சேர்ந்து ஒரு ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம்.
நபி(ஸல்)அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் ஏழு பேர் சார்பாக ஒரு ஒட்டகத்தையும் ஏழு பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தார்கள்.
                   அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி); நூல்: முஸ்லிம் (2323)

இந்த‌ ஹதீஸ் மூலம் ஒட்டகத்தில் ஏழுபேர் கூட்டு சேரலாம் என்பது தெளிவானாலும், ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் கூட்டு சேர்வதற்கும் இன்னொரு ஹதீஸ் ஆதாரமாக‌ உள்ளதை அறிய முடிகிறது.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் இருந்தபோது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழுபேர் வீதமும், ஒரு ஒட்டகத்தில் பத்துபேர் வீதமும் நாங்கள் கூட்டு சேர்ந்தோம்.
     அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி);    நூல்: திர்மிதீ(1421), நஸாயீ(4316), இப்னுமாஜா (3122)

ஆக, ஒட்டகத்தைப் பொறுத்தவரை ஏழு பேரும் கூட்டு சேர்ந்துக் கொள்ளலாம், அல்லது 10 பேரும் கூட்டு சேர்ந்துக் கொடுக்க‌லாம்.
நம் தமிழகத்தில் சிலர் ஆட்டைதான் குர்பானி கொடுக்கவேண்டும்; அந்தளவு வசதியுள்ளவர்கள் மட்டுமே கொடுக்க முடியும் என்று கருதுகிறார்கள். இந்தியாவில்தான் ஆட்டின் விலை அதிகமாக உள்ளதே தவிர, வெளிநாடுகளை எடுத்துக் கொண்டால் ஆட்டைவிட மாட்டின் விலைதான் கூடுதலாக இருக்கும். எனவே இந்தியாவைப் பொறுத்தவரை ஆடு கொடுக்க வசதியில்லாதவர்கள் குர்பானி கொடுக்க விரும்பினால் ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டைக் குர்பானி கொடுக்கலாம். ஆட்டைக் குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை மேலே நாம் பார்த்த‌ ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

பயணி மற்றும் பெண்கள் குர்பானி கொடுக்கலாமா?
வீட்டில் ஆண்களின் உதவியின்றி குடும்பத்தை நடத்தும் பெண்கள், வசதிப் பெற்றிருந்தால் அவர்களும் தங்களுக்காக குர்பானி கொடுக்கலாம். குர்பானி என்பது ஆண் பெண் ஆகிய இரு பாலருக்கும் உரிய வணக்கமாகும். அதுபோல் ஒருவர் தன் சொந்த ஊரில்தான் கொடுக்கவேண்டும் என்ற நிபந்தனை ஏதுமில்லை.  பிரயாணத்தில் இருப்பவர்களும் குர்பானி கொடுக்கலாம். நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக மக்காவிற்கு சென்று தனது மனைவிமார்களுக்கு குர்பானி கொடுத்துள்ளார்கள்.

நாங்கள் மினாவில் இருந்தபோது மாட்டிறைச்சி என்னிடம் கொண்டுவரப்பட்டது. நான் 'இது என்ன?' என்று கேட்டேன். மக்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தம் துணைவியர்களுக்காக மாடுகளை அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள் என்று பதிலளித்தார்கள்.                         
அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி); நூல்:புகாரி(5548)

இறந்தவர்கள் சார்பாகக் குர்பானி கொடுக்கலாமா?
நபி(ஸல்)அவர்களுடைய வாழ்நாளிலே அவர்களுக்கு மிகப் பிரியமான பலர் மரணித்திருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நேசித்த அவர்களுடைய மகன் இப்ராஹீம், மகள் ஜைனப்(ரலி), மனைவி கதீஜா(ரலி), சிறிய தந்தை அபூதாலிப் ஆகியோர் மரணித்தனர். இறந்தவர்களுக்கு குர்பானி கொடுப்பது கூடுமென்றால் நபி(ஸல்) அவர்களால் நேசிக்கப்பட்ட‌ இவர்களுக்கு முதலில் குர்பானிக் கொடுத்திருக்கவேண்டும். ஆனால் உயிருடன் வாழும் தன் குடும்பத்தார்களுக்கு கொடுத்தார்களே தவிர மரணித்தவர்களுக்காக அல்ல!

அதே சமயம் இறந்தவர் மரணிப்பதற்கு முன்பு குர்பானி கொடுக்கும்படி யாரிடமாவது கூறிச் சென்றிருந்தாலோ அல்லது அவர் ஆசைப்பட்டிருந்தாலோ அவர் சார்பில் கொடுக்கலாம். ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்துவிட்டு இறந்தவர்களுக்காக அவர்களது உறவினர்கள் அதை நிறைவேற்ற நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள் என்பதின் மூலம் மேற்கூறிய சட்டமும் நமக்கு கிடைக்கிறது.
(உக்பா இப்னு ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று '(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துக் கொண்டு (அதை நிறைவேற்றாமல்) இறந்துவிட்டார்' என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் 'உன் சகோதரிக்கு கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?' என்று கேட்டார்கள். அவர் 'ஆம் (நான் தான் நிறைவேற்றுவேன்)' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று; கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமைப் படைத்தவன்' என்றார்கள்.
                         அறிவிப்பவர்:இப்னு அப்பாஸ்(ரலி); நூல்:புகாரி (6699)

நபி(ஸல்) அவர்களுக்காக குர்பானி கொடுக்கலாமா?
நாங்கள் நபி(ஸல்) அவர்களுக்காக ஒரு குர்பானி கொடுக்கிறோம் என்று சிலர் வழக்கமாக்கி வருகிறார்கள். இதற்கு அல்லாஹ்வின் கட்டளையோ நபி(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலோ எதுவுமில்லை. எனவே இதுவும் மார்க்கத்தில் இல்லாததுதான்.

குர்பானிப் பிராணியைப் பயன்படுத்தலாமா?
குர்பானிக் கொடுப்பதற்காக வாங்கப்பட்ட ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றின் பாலை அருந்துவதையோ, அவற்றின் மீது பயணிப்பதையோ, அதன் மீது சுமைகளைத் சுமத்துவதையோ அல்லது அவைகளை உழுவதற்கு பயன்படுத்துவதையோ தவிர்ந்துக் கொள்ளவேண்டும். மேலும் அவற்றின் முடிகளை வெட்டியெடுத்து பயன்படுத்தவும் கூடாது. ஆனால் வெட்டுவதினால் பிராணிகளுக்கு எதுவும் பயன் உண்டு என்றால் வெட்டிக்கொள்ளலாம்.

அதேசமயம் மிகவும் தேவையுள்ள சந்தர்ப்ப‌த்தில் மட்டும் குர்பானிப் பிராணியை பயன்படுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒருவருக்கு ஒரு ஒட்டகத்தைத் தவிர வேறு ஒட்டகம் இல்லை. இப்போது இவர் வேறு ஒட்டகத்தை பெறும் வரைக்கும் குர்பானி கொடுக்கவேண்டிய ஒட்டகத்தில் பயணிக்கலாம். அதிலிருந்து பால் கரந்து அருந்திக் கொள்ளலாம். ஆனால் மற்றொன்று இருக்கும்போது இதை பயன்படுத்தக் கூடாது. ஆடு, மாடுகளுக்குரிய சட்டமும் இதுபோன்றுதான்.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் பலிப் பிராணியில் ஏறிச் செல்வதைப்பற்றிக் கேட்கப்பட்டது. அவர்கள் நபி(ஸல்) அவர்கள் "நீங்கள் அதில் ஏறிச் செல்லவேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டால் பயண வாகனம் கிடைக்கும்வரை முறையோடு அதில் ஏறிச் செல்க!" என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
            அறிவிப்பவர் : இப்னு ஜுரைஹ்(ரஹ்); நூல்:முஸ்லிம்(2346),(2347), நஸாயீ(2752),அபூதாவூத்(1498), அஹ்மத்(14230)
மேலும் நபி(ஸல்) அவர்கள் ஒரு நபித்தோழர் சிரமத்துடன் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு சென்றதைப் பார்த்தபோது அதில் ஏறி சவாரி செய்யும்படி கட்டளையிட்டுள்ளார்கள்.
ஒருவர் தமது குர்பானி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் "அதில் ஏறிக் கொள்ளும்" என்றார்கள். அதற்கவர் "இது குர்பானி ஒட்டகமாயிற்றே!" என்றதும் "(பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும்" என்றார்கள். மீண்டும் அவர் "இது குர்பானி ஒட்டகமாயிற்றே!" என்றதும் "(பரவாயில்லை) அதில் ஏறிக்கொள்ளும்" என மூன்றாம் தடவையும் கூறினார்கள்.
                  அறிவிப்பவர் : அனஸ்(ரலி); நூல்:புகாரி(1690)
நபி(ஸல்) அவர்கள் சிரமத்தின்போது பயணிப்பதற்கு சலுகை வழங்கியுள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் பயணிப்பதற்கு கால்நடைகள் பெருமளவில் பயன்படுத்தப்படவில்லையென்றாலும், பால் கரப்பது போன்ற மற்ற விஷயங்களிலும் கஷ்டமான சூழ்நிலையில் இதுபோன்றே நமக்கு அனுமதியுள்ளது என்பதை இதன் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

பொது நிதியிருந்து குர்பானி கொடுத்தல்
வசதியுள்ளவர்கள் மட்டுமின்றி வசதியற்றவர்களும் குர்பானி கொடுப்பதற்கான ஏற்பாட்டை நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தி இருந்தார்கள். அவர்கள் நடைமுறைப்படுத்திய 'ஜகாத்' என்ற‌ பொருளாதாரக் கொள்கை காரணமாக அரசுக் கருவூலத்தில் ஏராளமாக நிதி குவிய ஆரம்பித்தது. ஆரம்பக் காலத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிடக்கூட வசதியற்றிருந்த ஒரு சமுதாயம் மிக உன்னதமான பொருளாதார முன்னேற்றத்தை எட்டியது. இவ்வாறு செல்வச் செழிப்பு ஏற்பட்ட காலத்தில் குர்பானி கொடுக்க விரும்புகிறவர்களுக்கு குர்பானிப் பிராணிகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வழங்கினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் குர்பானிப் பிராணிகளை மக்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தனர். எனக்கு ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டிதான் கிடைத்தது. 'அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஆறு மாதக் குட்டிதானே கிடைத்துள்ளது' எனக் கூறினேன். 'அதையே நீர் குர்பானி கொடுப்பீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
   அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர்(ரலி); நூல்கள்: புகாரி(5547), முஸ்லிம் (3634)
பொது நிதியிலிருந்து குர்பானிப் பிராணிகள் வழங்கப்படும் வழக்கம் நபி(ஸல்) அவர்களது காலத்தில் இருந்ததை இந்த ஹதீஸிருந்து அறிந்துக் கொள்ளலாம்.

அல்லாஹ் மிக அறிந்தவன்!
(முற்றும்)

(இதைத் தொகுப்பதற்கு உதவியாக இருந்தவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்கட்டுமாக!)
நன்றி : பயணிக்கும் பாதை 

0 உங்களின் கருத்து (Comments):

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்பிற்கு நன்றி!

எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!

159 என்னை வட்டங்களில் கொண்டுள்ளனர்